Friday, November 6, 2009

அக்காவின் விரதமும் அகதி முகாம் சோறும்!

அக்காவின் துப்புரவு பற்றி
ஊரே அறியும்
அத்தானின் கவிதைகளும்
அக்காவின் பண்ட பாத்திரங்களும்
எப்போதுமே பிரகாசிக்கக் கூடியவை
அடுப்பு கரி எடுத்து
நொறுக்கித் தூளாக்கி
பற்களையும் பாத்திரங்களையும்
மினுக்குவதில்
அக்காவுக்கு நிகர் அக்காவேதான்
முகம் கழுவாமல்
அடுப்படி பக்கம் போனதில்லை
இதுநாள் வரை
விரத நாட்களில்
அக்காவின் வீடு
இன்னும் மங்களகரமாயிருக்கும்
மதியம் நான்கைந்து கறியுடன்
தயிர் மோர் வடை பாயாசமென
அசத்திவிடுவாள்.
வீட்டு வாசலில் வந்து
காகம் கரையும் நாட்களில்
ஒருபிடி அரிசியேனும் அதிகமாகத்தான்
சமைப்பாள்
விருந்தினர் எவரேனும் வருவார் என்ற
நம்பிக்கையில்
தெய்வங்கள் மீது
அக்கா வைத்திருந்த நம்பிக்கையும்
அசாத்தியமானது.
திருவிழாக் காலங்களில்
கோயில்களைப் போலவே
அக்காவின் வீட்டிலும்
சனங்கள் நிரம்பி வழியும்
இன்று
திருவிழா முடிந்த வீதியென ஆனது
அக்காவின் வாழ்வு.
எனினும்
நல்லூர் முருகன் கோயில்
கொடியேறிவிட்டதால்
அக்காவும் விரதம் இருப்பால்
முட்கம்பி வேலிக்குள்,
அரசு செலவில்
அவித்து வரும்
உணவை உண்டபடியும்
கூடாரம் ஒன்றுக்குள்
குடியிருந்தபடியும்!

No comments:

Post a Comment