| அக்காவின் துப்புரவு பற்றி |
| ஊரே அறியும் |
| அத்தானின் கவிதைகளும் |
| அக்காவின் பண்ட பாத்திரங்களும் |
| எப்போதுமே பிரகாசிக்கக் கூடியவை |
| அடுப்பு கரி எடுத்து |
| நொறுக்கித் தூளாக்கி |
| பற்களையும் பாத்திரங்களையும் |
| மினுக்குவதில் |
| அக்காவுக்கு நிகர் அக்காவேதான் |
| முகம் கழுவாமல் |
| அடுப்படி பக்கம் போனதில்லை |
| இதுநாள் வரை |
| விரத நாட்களில் |
| அக்காவின் வீடு |
| இன்னும் மங்களகரமாயிருக்கும் |
| மதியம் நான்கைந்து கறியுடன் |
| தயிர் மோர் வடை பாயாசமென |
| அசத்திவிடுவாள். |
| வீட்டு வாசலில் வந்து |
| காகம் கரையும் நாட்களில் |
| ஒருபிடி அரிசியேனும் அதிகமாகத்தான் |
| சமைப்பாள் |
| விருந்தினர் எவரேனும் வருவார் என்ற |
| நம்பிக்கையில் |
| தெய்வங்கள் மீது |
| அக்கா வைத்திருந்த நம்பிக்கையும் |
| அசாத்தியமானது. |
| திருவிழாக் காலங்களில் |
| கோயில்களைப் போலவே |
| அக்காவின் வீட்டிலும் |
| சனங்கள் நிரம்பி வழியும் |
| இன்று |
| திருவிழா முடிந்த வீதியென ஆனது |
| அக்காவின் வாழ்வு. |
| எனினும் |
| நல்லூர் முருகன் கோயில் |
| கொடியேறிவிட்டதால் |
| அக்காவும் விரதம் இருப்பால் |
| முட்கம்பி வேலிக்குள், |
| அரசு செலவில் |
| அவித்து வரும் |
| உணவை உண்டபடியும் |
| கூடாரம் ஒன்றுக்குள் |
| குடியிருந்தபடியும்! |
Friday, November 6, 2009
அக்காவின் விரதமும் அகதி முகாம் சோறும்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment